திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பி. கே. அகரம் கிராமத்தில் எழுந்தருளி நல்லாட்சி புரிந்து வரும் இறையுருள் தெய்வமாகிய ஸ்ரீ நல்ல செல்லியம்மன் வைகாசி தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 15 ந்தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 20 ந்தேதி அன்ன வாகனத்திலும், 21 ந்தேதி வெட்டுங்குதிரை வாகனத்திலும் ஸ்ரீ நல்ல செல்லியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
முக்கிய நிகழ்வான வைகாசி தேரோட்ட விழா நேற்றிரவு வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா வருகின்ற 26 ந்தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. இவ்விழாவையொட்டி வருகின்ற ஜூன் மாதம் 2 ந் தேதி ஸ்ரீ மாரியம்மன் வெட்டுங்குதிரையில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 3 ந்தேதி மதியம் பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. 4 ந்தேதி இரவு ஸ்ரீ மாரியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும், குடி விடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பி. கே. அகரம் கிராம பொதுமக்கள் ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் குடிப்பாட்டு மக்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.