பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி காலமானார். அவருக்கு வயது 72.
1952ஆம் ஆண்டு பிறந்த சுஷில் குமார் மோடி, மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பிஹார் துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்எல்ஏ, எம்எல்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் சுஷில் குமார் மோடிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக, தான் 2024 மக்களவை தேர்தலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில் குமார் மோடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று பாட்னாவின் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.