இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தகவல் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாக உள்ள நிலையில், பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்து யூடியூபர் இர்ஃபான் வீடியோ வெளியிட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் இர்ஃபான்.
இந்த சர்ச்சையை அடுத்து இர்ஃபான் அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கினார். மேலும், தன்னைத் தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாட்ஸப் மற்றும் இமெயில் மூலம் தனது செயலுக்கு இர்ஃபான் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு தனது யூ-ட்யூப் பக்கத்தில் பகிரங்கமாக வீடியோ மூலமாக மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக இர்ஃபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கோரினாலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் கறார் காட்டியுள்ளனர். இந்திய சட்டப்படி பிறக்க இருக்கும் குழந்தையின் பாலினத்தை கருவிலேயே அறிந்து கொள்வது குற்றமாகும். அப்படி, பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இர்ஃபான் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநரிடம் மன்னிப்பு கடிதம் வழங்கி மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாகவும் உறுதி அளித்தார். மன்னிப்பு கோரியதை அடுத்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க சுகாதாரத்துறை முடிவு செய்தது. ஆனால் இதுவரையும் இர்ஃபான் மன்னிப்பு வீடியோ வெளியிடவில்லை. இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது எக்ஸ் பக்கத்தில் இர்ஃபான் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள அவருக்கு கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.