கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் 1373 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். 294 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சிய 1079 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 2 வாரங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளத்தில் தற்போது பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால், கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, பைலேரியா, ஜிகா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொசுக்கடியை தவிர்க்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் இரத்தத் தட்டுக்கள் திடீரென வீழ்ச்சியடையும் என்பதால் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை மழையால் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதே இதற்கான தீர்வு என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற கட்டிடங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நீர் தேங்குவதைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கொசுக்கடியை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்
அதிக காய்ச்சல், தலைவலி, தசைவலி, பசியின்மை, குமட்டல், வாந்தி, சோர்வு, தொண்டை வலி, லேசான இருமல், கண்களுக்குப் பின்னால் வலி.
டெங்கு காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.